Tuesday, 14 September 2021

கலைமகள் பற்றிய அறிய தகவல்கள்

 

கலைமகள் பற்றிய அறிய தகவல்கள்


     கலைமகள், கலைமடந்தை, வாணி, பாரதி, காயத்திரி, சரசுவதி, சிந்தாதேவி, நந்தா விளக்கு, நாமிசைப்பாவை, வானோர் தலைவி, மண்ணோர் முதல்வி எனப் பல பெயர்களாற் போற்றப்படுகின்றார். இந்துக்கள் கலைமகளைச் சக்தியின் வடிவங்களில் ஒன்றாகப் போற்றி வழிபடுவர். புரட்டாசித் திங்களில் அமாவாசைக்கு அடுத்தநாள் சக்திக்குரிய விழாத் தொடங்கும். இதனை நவராத்திரி பூசை என்பர். பிற்காலத்தவர் நூல்களை எழுதும் பொழுது கலைமகளை வழிபட்டே எழுதத் தொடங்கினர். கலைமகள், கலைகள் அனைத்திற்கும் தலைவியாக இருப்பதால் கலைக்கூடப் பிணை என்றும் போற்றப்படுகின்றாள். அறிவின் சின்னமாக வெண்மை கருதப்படுவதால்,

வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை

அரியா சனத்தில் அரசரோடு என்னைச்

சரியா சனம்வைத்த தாய்

எனப்போற்றி வணங்கப்படுகின்றாள். கலைமகள் நான்கு திருக்கைகளை உடையவளாகக் கருதப்படுகின்றாள். அக் கைகளில் முறையே மாலையும் (அட்சமாலை), ஏடும், எழுத்தாணியும், வீணையும் தாங்கி உள்ளாள். அன்றியும் வலக்கைகளில் |எழுத்தாலான மாலையும் முத்திரையும், இடக்கைகளிற் குண்டிகையும், ஓலைச்சுவடியும், மலரும் வைத்திருக்கும் படிமங்களுங் காணப்படுகின்றன.

     கலைமகளின்ஊர்திகளாக அன்னமும் மயிலும் கருதப்படுகின்றன. பௌத்தர்களுஞ் சமணர்களும் கலைமகளை அறிவின் தெய்வமாகக் கலைகளின் தலைவியாகப் போற்றி வழிபடுவர். கிரேக்கர்கள் அதீனே என்றும், ரோமர்கள் மினர்வா என்றுங் கலைமகளைப் போற்றி வழிபடுவர்.

     தமிழர்களாயினும் சரி மற்றைய இன மக்களாயினும் சரி, பெண்வழிச் சமுதாய மரபில் வந்தவர்களே. மனித இன வளர்ச்சியிலே தாயே மிகச் சிறந்த பங்களிப்பினைச் செய்துள்ளாள். அதனால் மக்கள் தாய்மைக்குரிய பெண்மையினை, இன்பத்துக்குரிய கன்னியமாக, வீரத்துக்குரிய கொற்றவையாக பொருட்பேற்றுக்குரிய திருவுடையாளாக, அறிவினுக்குரிய தலைவியாகக் கொண்டனர்.

     கலைமகளுக்கு எனத் தனிக்கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது. பல சிவாலயங்களில் அம்மை கோயில் திருச்சுற்றில் கலைமகளுக்குத் திருமேனிகள் உள்ளன. சரசுவதி பூசை தமிழ்நாட்டில் ஆயுத பூசையாக நடைபெற்று வருகிறது.

 

 

No comments:

Post a Comment