நாதஸ்வரத்தின் வரலாறு
"ஓங்கிய மூங்கிழயர் சந்தனம் வெள்ளிகஞ்சம்
தாங்கு சுருங்காலிசெங்காலிதந்தம்பூங்குவாய்
நாதகரஞ்செய்யவேநன்றென்றாரிப்புவியல்
பாகமறிந்திடுவோர்பார்”
என்கிற நாதஸ்வர இலக்கண நூலில் (அரபத்த நாவலர் நாதசுர இலக்கண
நூல் கூறியுள்ள பாடலின்படி மூங்கில், சந்தன மரம், கருங்காலி மரம், செங்காலி
மரம் (ஆச்சா மரம்) ஆகியவை கொண்டும் வெள்ளி, தங்கம் யானையின் தந்தம் போன்றவற்றைக்
கொண்டும் நாதஸ்வரம் செய்யப் படுகிறது. தற்சமயம் அதிகளவு சுமார் 40, 50 வயதிற்கு
மேற்பட்ட செங்காலி மரத்தைக் கொண்டுதான் தஞ்சாவூர் மாவட்டத்திலிலுள்ள நரசிங்க
பேட்டை கிராமத்தில் அழகுற செய்யப்படுகிறது.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டாங்கோயில் வீரசாமி பிள்ளை என்கிற
நாதஸ்வர கலைஞர் தங்கத்தினாலான நாதஸ்வரத்தைப் பயன்படுத்தினார். அவரைத் "தங்க
நாயனார்" எனச் சொல்லுவார்கள். நாக சர்பத்தின் (பாம்பின் உருவம்) |அமைப்போடு
முன்பு இந்த இசைக்கருவி இருந்தநால் “நாகஸ்வரம் என்று இருந்தது. பிற்காலத்தில்
நாதத்தை எழுப்பியதால் ஏறத்தாழ 13 ஆம் நூற்றாண்டு முதல் நாதஸ்வரம் என்று பெயர்
மாறியது.
கருப்புநிறம் கொண்ட இந்த நாதஸ்வரத்தின் சுருதியின் அளவைப்
பொருத்து நாதஸ்வரத்தின் நீளம் மாறும் 1 கட்டை சுருதியாக இருந்தால் 36.1/4 அங்குல
நீளமும், 11/2 கட்டை சுருதியாக இருந்தால் 35.1/2 அங்குல
நீளமும், 2 கட்டை சுருதியாக இருந்தால் 343/4 அங்குல நீளமும்,
3 கட்டை சுருதியாக இருந்தால் 30.3/4 அங்குல நீளமும், 4 கட்டை
சுருதியாக இருந்தால் 29.3/4 அங்குல நீளமும், 5 கட்டை சுருதியாக
இருந்தால் 26 அங்குல நீளமுடையதாக இருக்கும்.
இதை வாசிக்க பன்னிரண்டு துளைகள் இருக்கும். இவற்றுள் ஒன்று
முத்திரை எனப்படுவது. கழித்து ஏழு துளைகளை இடக்கையின் பெருவிரலும், சிறுவிரலும்
நீக்கி மற்ற மூன்று விரல்களாலும், வலக்கையின் பெருவிரல் நீங்க நான்கு விரல்களாலும்
மொத்தம் ஏழு விரல்கள் வாசிக்க வேண்டும் என.
"வளைவாயருகொன்று முத்திரையாய் நீக்கித்
துளைபேசி னின்ற விரல்கள் விளையாட்டிட
மூன்று நானகுலவ மென்றார் கானேகா, வடமாரு
மென்முலையாள்வைத்து"
என்கிற
நாதஸ்வர இலக்கணப் பாடலிலிருந்து அறியலாம்.
ஏழுதுளைகள் சரி,க,ம,ப.த.நி என்பதைக்குறிக்கும். அதாவது சட்சம்,
ரிசபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடதம் என்பன ஆகும். ஏழு
சப்த சுரங்களுக்குத் தமிழ் பெயர்கள் உண்டு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை,
இளி, விளரி, தாரம், என்பன ஆகும்.
நேரத்திற்கு ஏற்ப, இராகங்களையும், பாடல்களையும் பாட வேண்டும் என்கிற
வழக்கம் நாதஸ்வரத்திற்கு உண்டு. அதாவது காலை 4 மணியளவில் பூபாளம் பெளளி, மலைய
மாருதம் ராகமும், காலை 6 மணியளவில் பிலஹரி, கேதாரம் ராகமும், 8 மணியளவில்
தன்யாசி, சாவேரி, அசாவேரி ராகமும், 10 மணியளவில் மேல்நாட்டைக்குறிச்சி, உசேனி
ராகமும், மாலை 4 மணியளவில் பூர்விகல்யாணி, கல்யாணி மந்தாரி ராகமும், மாலை
6 மணியளவில் மேல்சங்கராபரணம், பைரவிராகமும், இரவு 8 மணியாவில் காம்போதி,
தோடிராகமும், இரவு 10 மணியளவில் ஆனந்த பைரவி, நீலாம்பரி ராகமும், இரவு
12 மணியளவில் பேசுடை சாமா ராகமும், நள்ளிரவு 2 முதல் 4 மணியளவில் மோஹனம்,
இந்தோளம் இராகங்கள் என முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
தொன்மையையும், தனிச்சிறப்பையும் பெற்ற நாதஸ்வரக் கலையை வளர்க்க
தமிழ்நாடு அரசின் இசைக் கல்லூரி சார்பாக சென்னை, மதுரை, திருவையாறு, திருச்சி
போன்ற இடங்களில் 3 வருட பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது. இதே போன்று
தமிழக அரசின் இந்து சமய அறநிலையததுறை சார்பாக பழனியில் நாதஸ்வர பயிற்சி வகுப்புகள்
நடத்தப்படுகிறது.
நாதஸ்வரம், தவில் போன்ற இசைகருவியை கற்க தமிழகம் முழுவதிலும்
17 அரசு இசைப்பள்ளிகள் உள்ளன. இது தவிர பெரிய வித்வான்கள் தங்களின் இடத்தில்
குருகுலக் கல்வியாக இளம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.
பண்டைய தமிழர்களின் இசைக்கருவிகள் நாகரீக வளர்ச்சியாலும்,
அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் பல கருவிகள் இன்று உருமாறி உள்ளது.
சில கருவிகள் அழிந்தும் போயிற்று. எடுத்துக்காட்டாகக் குழல் அல்லது வங்கியம்
எனப்பட்டது நாதஸ்வரமாகவும், யாழ் எனப்பட்டது விணையாகவும், முழவு எனப்பட்டது மிருதங்கமாகவும்
மாறிவிட்டது.
ஓர் சமூகத்தில் இசைக் கலைஞர்கள் இல்லாமல் இருந்தால் அது நல்ல
சமூகமில்லை என்பதை கீழ்கண்ட புறநானூற்று வரிகள் மூலம் உணரலாம்.
"துடியன்
பாணான் பறையன் கடம்பனென்
றிந்நான்
கல்லாது குடியுமில்லை" (புறம் 335)
இப்படி வரலாற்றுப்பெருமையும் கலாச்சாராப் பெருமையும் இந்த
நாதஸ்வரத்திற்கு உண்டு.
No comments:
Post a Comment